நாளை (07) முதல் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் என்று நம்புவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நாட்டில் வெள்ளிக்கிழமை (03) மின் கட்டமைப்பில் ஏற்பட்ட பாரிய மின்தடை காரணமாக நாடளாவிய ரீதியில் பல மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டது.
அதன் பின்னர் நுரைச்சோலை அனல்மின் நிலையம் தவிர்ந்த ஏனைய சகல மின் நிலையங்களினது, கோளாறுகள் சீரமைக்கப்பட்டு மின் விநியோக செயற்பாடுகள் வழமைக்கு கொண்டுவரப்பட்டன.
எனினும் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகளை வழமைக்குக் கொண்டுவர மேலும் சில நாட்கள் ஆகலாம் என்று வலுசக்தி அமைச்சு தெரிவித்திருந்தது.
இதனால் கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 09 மணி வரை ஒரு மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது.
இந் நிலையில் நாளைய தினம் முதல் அனைத்துப் பிரச்சினைகளும் சரி செய்யப்பட்டு தடையின்றி மின் விநியோகம் வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.