ஜனாதிபதியின் சேதன விவசாய கொள்கைக்கு அமைய, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நைட்ரஜன் திரவ உர கேன் வெடிப்பு சம்பவமொன்று அனுராதபுரம் – ஹொரவ்பொத்தானை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
நாட்டில் பயிர் செய்கைக்கு இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்து, சேதன பசளையை பயன்படுத்துவதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்தியாவில் இருந்து பயிர்ச்செய்கைக்காக இறக்குமதி செய்யப்பட்ட திரவ உரம் அடங்கிய கேன்கள் வெடித்து தற்போது அவற்றை பயன்படுத்த முடியாமல் இருப்பதாக ஹொரவ்பொத்தானை பிரதேச விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
இம்முறை பயிர்ச்செய்கைக்காக விவசாய திணைக்களத்தினால் சுமார் 200 திரவ உர கேன்கள் தமது அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே சுமார் 100 திரவ உர கேன்கள் வெடித்து வீணாகியுள்ளதாகவும் ஹொரவ்பொத்தானை விவசாயிகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு விவசாயத் திணைக்களத்தினூடாக தமது விவசாயிகள் சங்கத்திற்கு வழங்கப்பட்ட திரவ உரத்தை வழமையாக பயன்படுத்தும் உரத்தெளிப்பான்களை பயன்படுத்தி தெளிக்க முடியாது எனவும் அவர்கள் மேலும் குற்றம் சாட்டியுள்ளனர்.
அத்துடன் இந்த திரவ உரங்களை பயிர்களுக்கு தெளிக்கும்போது சரும நோயும் ஏற்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.