இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில் “ஆரோக்கியமான நாளை” எனும் தொனிப்பொருளில் இருநாட்களைக் கொண்ட தேசிய உடற்தகுதி நிகழ்ச்சித்திட்டம் நேற்று(08) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக இரண்டாம் நாட் செயலமர்வு இன்று (09) இடம்பெற்றது. இதன்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி.கே.கேதீஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு மனநலம் மற்றும் மன தளர்ச்சியை மேம்படுத்துவதற்கான அடிப்படை உடற்பயிற்சிகளை யோகாசனம் சார்ந்ததாக செயன்முறையான பயிற்சிகளை வழங்கி விளக்கமளித்தார்.
குறித்த பயிற்சிகள் தனிநபராகவோ அல்லது குழுவாகவோ இணைந்து முறையாக மேற்கொள்ளக்கூடிய வகையில் அமைந்திருந்தது. மேலும் இவை வேலைத்தளங்களில், வீடுகளில் மன அழுத்தத்தை நீக்க மேற்கொள்பவையாக அமைந்ததுடன் தொற்றா நோய்களுக்கான தடுப்பு முறை சார்ந்தவையாகவும் அமைந்திருந்தன.