ஆட்சியைத் தக்கவைக்க ராஜபக்ஷ அரசு எதையும் தயக்கமின்றிச் செய்வார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச செய்திச் சேவையொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“2015ம் ஆண்டில் ஆட்சிப்பீடம் ஏறியது ஐக்கிய தேசியக் கட்சி – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான தேசிய அரசு ஒரே பாதையில் பயணிக்காமல் வெவ்வேறு பாதைகளில் பயணித்தார்கள். இதனால் கூட்டு அரசு ஆட்டம் கண்டது.
அந்தத் தேசிய அரசு மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்தவில்லை. அவர்களுக்கு எதிராக சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை.
தேசிய அரசின் அசமந்தப்போக்கான செயற்பாடுகளால் விரக்தியடைந்த மக்கள் சிவில் அமைப்புக்கள் நல்லாட்சி அரசை விமர்சிக்க தொடங்கினார்கள்.
இது ஐக்கிய தேசியக் கட்சி,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுக்கு இடையில் இருந்த ஒற்றுமையைச் சிதறடித்தது.
அவ்வாறான நிலைமை ராஜபக்சக்களுக்கு மீண்டும் ஆட்சிப்பீடம் ஏற நல்ல சந்தர்ப்பமாக அமைந்தது” என்று தெரிவித்தார்.