கூட்டு ஒப்பந்தம் அவசியம் என வலியுறுத்தி பெருந்தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

Protest
Protest

தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க கூட்டு ஒப்பந்தம் அவசியம் என வலியுறுத்தி தோட்டத் தொழிலாளர்களால் லிந்துலை நகரில் இன்று (12) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

லிந்துலை நகரில் நடைபெற்ற இப்போராட்டத்தில் டயகம, தலவாக்கலை, கொட்டகலை, லிந்துலை மற்றும் ஏனைய பல தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பங்கேற்றிருந்தனர்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் அனுஷியா சிவராஜா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சக்திவேல், கொட்டகலை, தலவாக்கலை பிரதேச சபைகளை சேர்ந்த உறுப்பினர்கள் உட்பட கட்சியின் பிரதிநிதிகளும் இப்போராட்டத்தில் பங்கேற்று, தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இப்போராட்டத்தில் பங்கேற்ற மக்கள், தோட்ட நிர்வாகம் மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்களின் கெடுபிடிகளை கண்டித்ததுடன், தமக்கு உரிய சம்பள கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

மேலும் கூட்டு ஒப்பந்தம் இல்லாமையினாலேயே தமக்கு இந்நிலைமை ஏற்பட்டுள்ளது என சுட்டிக்காட்டிய மக்கள், கூட்டு ஒப்பந்தம் மீண்டும் வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.