யானைத் தந்தம் ஒன்றினை சட்டவிரோதமாக கொண்டு சென்ற நிலையில் கைதுசெய்யப்பட்ட இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அம்பாறை – பெரியநீலாவணை – ஒந்தாட்சிமடம் இராணுவ சோதனை சாவடியில் வைத்து, கடந்த சனிக்கிழமை அதிகாலை குறித்த இளைஞன் கைதுசெய்யப்பட்டு காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
கல்முனை ஊடாக திருகோணமலைக்குப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றில் சென்ற, அம்பாந்தோட்டை திஸ்ஸமகாராம பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞனே இதன்போது கைதுசெய்யப்பட்டார்.
இந்த நிலையில், சந்தேக நபர் கல்முனை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இரு பயணப் பைகளைப் பயன்படுத்தி, மிகவும் சூட்சுமமான முறையில், அவர் யானைத் தந்தத்தைக் கொண்டுசெல்ல முயற்சித்துள்ளார்.
சுமார் 2 அடி நீளமான அந்த யானைத் தந்தம் எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்றும், இதற்காக யானை ஒன்று கொலை செய்யப்பட்டதா? என்பது உட்பட பல கோணங்களில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.