முக்கியமான இரு தரப்பினரின் அனுமதியுடன் மட்டுமே எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ உறுதி

gas 1
gas 1

எதிர்காலத்தில் நுகர்வோர் அதிகார சபை மற்றும் இலங்கை தரநிர்ணய நிறுவக அனுமதியுடன் மட்டுமே உள்நாட்டு எரிவாயுவை விற்பனை செய்து வெளியிடுவோம் என்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் லிட்ரோ சமையல் எரி வாயு நிறுவனம் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்களில் இருந்து எரிவாயு கசிவதால் ஏற்படும் விபத்துக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு கோரி சிவில் சமூக செயற்பாட்டாளர் நாகாநந்த கொடித்துவக்கு தாக்கல் செய்த நீதிப்பேராணை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே லிட்ரோ சமையல் எரி வாயு நிறுவனம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஹர்ஷ அமரசேகர இதனைத் தெரிவித்தார்.

எரிவாயு கொள்கலனில் உள்ள எரிவாயு கலவை செறிவைக் காட்டும் ஸ்டிக்கர் ஒட்டவதற்கும் லிட்ரோ நிறுவனம் சார்பில் சட்டத்தரணி மற்றுமொரு உறுதியையும் வழங்கினார்.

ருவன் பெர்னாண்டோ மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்தநிலையில் நேற்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்ததன் பிரகாரம் இரண்டு பிரமாணப் பத்திரங்களும் லிட்ரோ சமையல் எரி வாயு நிறுவனம் சார்பில் அந்நிறுவனத்தின் சட்டத்தரணியால் தாக்கல் செய்யப்பட்டது.