கற்பிட்டி சவக்காலையில் வைக்கப்பட்டிருந்த யோசுநாதரின் திருச் சொரூபம் கீழே அடித்து நொருக்கப்பட்டுள்ளமை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கற்பிட்டி சென்.மேரிஸ் வீதியிலுள்ள கிறிஸ்தவ சவக்காலையில் உள்ள செபம் படிக்கும் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த யோசுநாதரின் திருச் சொரூபம் நிலத்தில் கீழே அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அத்துடன், குறித்த சவக்காலையில் அடக்கம் செய்யப்பட்டவர்களின் அடையாளத்திற்காக பெயருடன் புதைக்கப்பட்ட சுமார் 40 சிலுவைகள் (குருஸ்) இதன்போது சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் நேற்று (23) இரவு தமக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, இன்று (24) வெள்ளிக்கிழமை சம்பவ இடத்திற்கு வருகை தந்த கற்பிட்டி காவல்துறையினரும், புத்தளம் தடயவியல் காவல்துறையினரும், கை ரேகை பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அத்துடன், மோப்ப நாய் கொண்டுவரப்பட்டு சவக்காலை உள்ள பகுதியில் காவல்துறையினர் தேடுதல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.
நாளை (25) சனிக்கிழமை புனித நத்தார் பண்டிகைக் கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ள நிலையில், இவ்வாறு யோசுநாதரின் திருச் சிரூபம் கீழே அடித்து நொருக்கப்பட்டு, சிலுவைகள் சேதமாக்கப்பட்டுள்ளமை அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இனங்களுக்கிடையில் முறுகலை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறு சிலை மற்றும் சிலுவைகள் உடைக்கப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பிராந்திய பிரதிக்காவல்துறைமா அதிபர், காவல்துறை அத்தியட்சகர் மற்றும் உதவிக்காவல்துறை அத்தியட்சகர் ஆகியோரின் ஆலோசனையில் கற்பிட்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.