நுவரெலியாவிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மகிழுந்து ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்ததோடு, மற்றொருவர் பலத்த காயங்களுக்குள்ளாகியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா கண்டி பிரதான வீதியில் புஸ்ஸலாவ சரஸ்வதி மத்திய கல்லூரிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மகிழுந்துடன் குறித்த முச்சக்கரவண்டி மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று(26) காலை 9.45 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக புஸ்ஸலாவ காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்ததோடு, அதில் பயணித்த பெண் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்தில் 70 வயதுடைய டீ.எம்.ருபானந்த என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து தொடர்பில் புஸ்ஸலாவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.