ஆழிப்பேரலையின் 17 ஆவது ஆண்டு நினைவு தினம் இலங்கை முழுவதும் அனுஷ்டிப்பு!

download 45
download 45

2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட ஆழிப்பேரலையால் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து, நாடளாவிய ரீதியில் இன்று முற்பகல் 9.25 முதல் 9.27 வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 17 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் கொவிட்-19 பரவலுக்கு மத்தியில் இந்த முறை சமய நிகழ்வுகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்படி வடக்கு கிழக்கு மற்று மலையகம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும், ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட ஆழிப்பேரலை ஆசிய நாடுகளில் வரலாறு காணாத அளவில் அழிவை ஏற்படுத்தியது.

ரிக்டர் அளவுகோளில் 9.1 முதல் 9.3 மெக்னிடீயூட்டாக அந்த நில அதிர்வு பதிவாகியிருந்தது.

இதன் காரணமாக இந்து சமுத்திர பிராந்தியத்தில் சுமார் 100 அடி உயர்த்திற்கு ஆழிப்பேரலை உருவாகியது.

இலங்கை, இந்தியா, மலேசியா, மியன்மார், அந்தமான், தாய்லாந்து உள்ளிட்ட 14 ஆசிய நாடுகளின் கரையோரங்களை இந்த ஆழிப்பேரலை சூரையாடிச் சென்றது.

ஆசிய நாடுகளில் 227,898 உயிர்களை இந்த ஆழிப்பேரலை காவுகொண்டது.

அத்துடன், பல்லாயிரக்கணக்கான மக்களை நிர்க்கதியாக்கியது.

இந்து சமுத்திர நாடுகளில் 15 பில்லியன் டொலர்கள் பெறுமதியான சொத்துகள், உடைமைகளையும் சேதமாகின.

இந்த ஆழிப்பேரலையின் கோரத் தாண்டவத்தால் 30,196 உயிர்கள் இலங்கையிலும் காவுகொள்ளப்பட்டதுடன் 21,411 பேர் காயமடைந்தனர்.

500,000க்கும் அதிகமான பொதுமக்கள் நிர்க்கதியாகினர்.

அதுமட்டுமன்றி சொத்துகள், உடைமைகள் சேதமடைந்தமையினால் கல்வி, போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளும் பெரும் பாதிப்படைந்தமை குறிப்பிடத்தக்கது