இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நளினிக்கு தற்காலிக விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ரஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் கடந்த 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இவ்வழக்கின் குற்றாவாளிகளான ஏழு பேரையும் விடுதலை செய்யக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்த சூழலில், உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் தன்னை அருகிலிருந்து கவனித்துக்கொள்வதற்காகத் தன் மகள் நளினிக்கு தற்காலிக விடுப்பு வழங்க வேண்டும் என்று அவரது தாயார் பத்மா, சென்னை மேல் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, நளினிக்கு தற்காலிக விடுப்பு வழங்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில் வேலூர் பெண்கள் சிறையிலிருக்கும் நளினி ஒரு தற்காலிக விடுப்பில் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் திகதி ஒரு மாத தற்காலிக விடுப்பில் நளினி வெளியே வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.