தொடரும் எரிவாயு தட்டுப்பாடு!

1640598688 litro 02
1640598688 litro 02

புத்தளத்தில் சமையல் எரிவாயுக்கு தொடர்ந்தும் பெரும் தட்டுப்பாடு நிலவி வருவதனால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

புத்தளம், பாலாவி மற்றும் கற்பிட்டி ஆகிய பகுதிகளில் எரிவாயு விற்பனை நிலையங்களில் “எரிவாயு இல்லை” என்கின்ற பதாதைகளே தொங்க விடப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது.

எனினும், புத்தளம் பகுதிகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்கின்ற மதுரங்குளி 10 ஆம் கட்டை பகுதியில் உள்ள மொத்த விற்பனை நிலையத்தில் மாத்திரம் சமையல் எரிவாயு மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனால், புத்தளம் , கற்பிட்டி, கருவலகஸ்வெவ, முந்தல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சமையல் எரிவாயுவை பெறுவதற்காக முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள்கள் என்பவற்றில் வருகை தந்து வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.

எனினும், சமையல் எரிவாயுவை பெற வருகை தரும் மக்களுக்கு, மொத்த விற்பனை நிலைய ஊழியர்களினால் அவர்களது இலட்சனை பொறிக்கப்பட்ட இலக்கம் வழங்கப்படுகிறது.

நாள் ஒன்றுக்கு நூறு இலக்கம் மாத்திரமே வழங்கப்படுகின்றன. நூறுக்கு மேல் வருகை தரும் மக்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

இன்றும் காலை முதல் நூறு பேருக்கு மாத்திரமே சமையல் எரிவாயு விநியோகிக்கப்பட்டுள்ளதுடன், பின்னர் வருகை தந்த 30 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சமையல் எரிவாயு பெற்றுக்கொள்ள முடியாத நிலையில், விற்பனையாளர்களோடு முரண்பட்டு திரும்பிச் சென்றமையை காணமுடிந்தது.

இதன்போது மக்கள் அரசுக்கு எதிராக தமது கடும் கண்டனங்களை தெரிவித்து எழுப்பிய நிலையில் அங்கிருந்து சென்றனர்.