இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 68 பேரை மீட்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணை மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஒருவரினால், நேற்றைய தினம் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி முதலான பகுதிகளிலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக அண்மையில் கடலுக்கு சென்ற 68 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கையானது, 1974 ஆம் ஆண்டு இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மீறுவதாக உள்ளது.
எனவே, தமிழக மீனவர்கள் 68 பேரையும் இலங்கையிலிருந்து மீட்டு, ஒப்படைக்குமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என, மனுதாரர் அந்த மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.