வவுனியாவில் 74வது சுதந்திர தின நிகழ்வு இன்று (04) காலை இடம்பெற்றது.
வவுனியா மாவட்டத்தின் பிரதான சுதந்திர தின நிகழ்வு வவுனியா நகரசபை மைதானத்தில் அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர தலைமையில் இடம்பெற்றதுடன், அதிதியாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கு.திலீபன் கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
நரசபை மைதானத்தில் இராணுவ அதிகாரிகள், அரச அதிகாரிகள், காவற்துறை அதிகாரிகள் வரவேற்கப்பட்டதுடன், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் அவர்களால் தேசியக் கொடி ஏற்றப்படது. இதன்போது தமிழ், சிங்கள மொழிகளில் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.
இராணுவத்தினர், காவற்துறையினர், சிவில் பாதுகாப்பு படையினர், மாணவர்கள் ஆகியோரின் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றதுடன், தமிழ், சிங்கள, முஸ்லிம் கலாசாரத்தை வெளிப்படுத்தும் கலாசார நடனமும் இடம்பெற்றது. இதன்போது சுதந்திர தினத்தை முன்னிட்டு நகரசபை மைதானத்தில் அதிதிகளால் மரநடுகையும் இடம்பெற்றது.
நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், உதவி மாவட்ட செயலாளர் திருமதி மு.சபர்ஜா, திணைக்கள தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், இராணுவ அதிகாரிகள்,காவற்துறை அதிகாரிகள், சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.