நிதியமைச்சர் அலி சப்ரி நாடாளுமன்றில் ஆற்றிய விசேட உரை

ali 2
ali 2

நாட்டில் பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டு ஒதுக்கமாக 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கூட இல்லை என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் நிதியமைச்சர் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் ஆற்றிய விசேட உரையின் போதே, இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் வேதனத்திற்காக மாத்திரம் 845 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக ஓய்வூதியம், விசேட தேவையுடையோர் கொடுப்பனவு, சமுர்த்தி கொடுப்பனவு, அத்தியாவசிய மருந்து கொள்வனவு, பாடசாலை புத்தகம் மற்றும் சீருடை உற்பத்தி என்பனவற்றுக்கு 595 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இவ்வாறான செலவினமானது நாட்டிற்கு கிடைக்கப்பெற்ற வருமானத்தை காட்டிலும், அதிகமாகும்.

அதேநேரம், 1956ஆம் ஆண்டு முதல் இலங்கை, வெளிநாடுகளில் இருந்து கடன்பெற ஆரம்பித்தது.

1956ஆம் ஆண்டு முதலாவதாக 6 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையை பெற்றிருந்தோம்.

அது, தற்போது உள்ள தரவுகளின் அடிப்படையில் 51 பில்லியன் அமெரிக்க டொலர் கடனாக உயர்வடைந்துள்ளது.

கடந்த 2 வருடங்களில் வெளிநாடுகளில் இருந்து கடன் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும், கடந்த 2 வருடங்களில் வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட கடன்தொகைக்கான வட்டியாக 8 பில்லியன் அமெரிக்க டொலரை செலுத்தியிருக்கின்றோம்.

நாடு தற்போது பாரிய பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது.

அதனை உடனடியாக தடுத்து முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு, அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவையுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமைக்கு சீனா ஆரம்பத்தில் தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தது.

எனினும், நேற்று முன்தினம் சீனாவுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில், அந்த நிலைப்பாடு மாற்றம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள குறைந்த பட்சம் 6 மாதங்கள் வரை செல்லும் என நிதியமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.