வவுனியாவில் இளைஞன் கைது

20220517 110930
20220517 110930

வவுனியாவில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் இருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா காவற்துறையினர் நேற்று (18.05) தெரிவித்தனர்.

வவுனியாவில் பசார் வீதியில் மார்ச் மாதம் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக வவுனியா காவல் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.எஸ்.ஜெயக்கொடி அவர்களின் வழிகாட்டலில், வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு காவற்துறை பரிசோதகர் கியான் தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, நொச்சியாகம பகுதியில் மறைத்து வைத்திருந்த மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டதுடன், அதனை திருடிய இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளார்.  குறித்த இளைஞன் நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபராவார். 

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இளைஞனை நீதிமன்றில் முற்படுத்த வவுனியா காவற்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.