40,000 மெற்றிக் தொன் பெற்றோல் தாங்கிய கப்பல் வருகையில் தாமதம்!

gas ship
gas ship

40,000மெற்றிக் தொன் பெற்றோலுடன் நேற்று நாட்டை வந்தடையவிருந்த கப்பல், மேலும் தாமதமடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விநியோக நிறுவனம் இது தொடர்பில் பெற்றோலிய கூட்டுதாபனத்திற்கு அறிவித்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது ருவிட்டர் பதிவில் நேற்று மாலை தெரிவித்திருந்தார்.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் தாங்கிய குறித்த கப்பல், நேற்று முன்தினம் நாட்டை வந்தடைய இருந்தது.

எனினும், அந்தக் கப்பல் நேற்றைய தினம் நாட்டை வந்தடையும் என பின்னர் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், குறித்த கப்பல் இலங்கையை வந்தடையும் தினம் பின்னர் அறிவிக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதி வெள்ளிக்கிழமைகளில், சுகாதார சேவை பணிக்குழாமினருக்காக தெரிவு செய்யப்பட்ட 74 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகிக்கும் வேலைத்திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும், வைத்தியர், தாதியர், ஒளடதவியலாளர்கள் உள்ளிட்ட சுகாதார பணிக்குழாமினர், நேற்றைய தினம் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசைகளில் காத்திருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

வைத்தியர்களுக்கு எரிபொருளைப் பெற்றுக் கொடுக்க வினைத்திறனான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் நேற்று வலியுறுத்தி இருந்தார்.

இதேவேளை, 600 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில், யாழ்ப்பாணம் – மானிப்பாயில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு குறித்த டீசல் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை சிறப்பு அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, 53 வயதான சந்தேகநபர் ஒருவரே கைதுசெய்யப்பட்டார்.

அவரை, மானிப்பாய் காவல்துறை நிலையத்தில் ஒப்படைக்க காவல்துறை சிறப்பு அதிரடிப் படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.