ஊடக நிறுவனங்களுக்கு தேவையான எரிபொருளை வழங்குமாறு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடமும், வலுசக்தி அமைச்சிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 10ம் திகதி வரையில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகிக்க நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்ததாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இதற்கமைய சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு, விமான நிலையங்கள், மின்சாரம், துறைமுகங்கள், விவசாயத்துறை மற்றும் ஏற்றுமதி தொழிற்துறை உள்ளிட்டவற்றுக்கு மாத்திரம் குறித்த காலப்பகுதியில் எரிபொருள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அத்தியாவசிய சேவைகளின் போது ஊடகத்துறை உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
இந்த விடயம் தொடர்பில், வெகுசன ஊடக அமைச்சின் செயலாளரிடம் பிரபல செய்தி சேவை ஒன்று வினவியபோது, அதற்கு பதிலளித்த அவர், மின்சாரம் தடைபடும் காலப்பகுதியில் ஊடக நிறுவனங்களில் மின்பிறப்பாக்கியினை செயற்படுத்துவதற்கு தேவையான டீசலை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டார்.