பிரசவித்த சிசுவைக் கழுத்து நெரித்துக் கொலை செய்த 15 வயது சிறுமி!

baby
baby

மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் பாழடைந்த காணியில் இருந்து சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சிசுவைப் பிரசவித்த 15 சிறுமியையும், அந்தச் சிறுமியைக் கர்ப்பமாக்கிய 29 வயதுடைய இளைஞரையும் ஏறாவூர் காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஏறாவூர் சுகாதாரத்துறையில் டெங்கு ஒழிப்புப் பிரிவில் கடமையாற்றி வரும் குறித்த இளைஞர், அந்தப் பகுதியிலுள்ள வீடுகளுக்குச் சோதனை நடவடிக்கைக்காகச் சென்ற நிலையில் புதிய காட்டுப்பள்ளி வீதியில் உள்ள 15 வயதுடைய சிறுமியின் வீட்டைச் சோதனை செய்த போது சிறுமியுடன் தொடர்பு ஏற்படுத்தி சிறுமியைக் கர்ப்பமாக்கியுள்ளார் என்று காவற்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

கர்ப்பமடைந்த சிறுமி பாடசாலை செல்வதை நிறுத்திய நிலையில், நேற்று தனது வீட்டில் குழந்தையைப் பிரசவித்துள்ளார்.

பிறந்த சிசுவைக் கழுத்து நெரித்துக் கொலை செய்த குறித்த சிறுமி, சடலத்தை வீட்டின் முன்னால் உள்ள பாழடைந்த காணியில் வீசியுள்ளார் என்றும் காவற்துறை விசரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து குறித்த சிறுமியையும் சிறுமியைக் கர்ப்பமாக்கிய நபரையும் காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சிறுமி காவற்துறையினரின் பாதுகாப்புடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சிசுவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.