500 மில்லியன் ரூபாய் கிடைக்காத பட்சத்தில் அஞ்சல் மூல வாக்குகளுக்கு புதிய திகதி அறிவிக்கப்படும்!

1518228598 707149000election2 L
1518228598 707149000election2 L

எதிர்வரும் புதன்கிழமைக்குள் திறைசேரி 500 மில்லியன் ரூபாயை வழங்காவிட்டால் அஞ்சல் மூல வாக்குகளுக்கான புதிய திகதிகளை அறிவிக்க நேரிடும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்காக ஏப்ரல் 25 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அஞ்சல் மூல வாக்களிப்புக்களுக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை காலம் குறிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் அஞ்சல் மூல வாக்குகளை அச்சிடுவதற்கு போதிய கால அவகாசம் இல்லை என அரசாங்க அச்சகப் பணிப்பாளர் கங்கானி லியனகேயும் தெரிவித்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் எதிர்வரும் புதன்கிழமைக்குள் தமது ஆணைக்குழு 500 மில்லியன் ரூபாவை முன்பணமாகப் பெற்றுக் கொள்ளாத பட்சத்தில் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான புதிய திகதிகள் அறிவிக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதற்கு இந்த மாத இறுதிவரை திறைசேரியிலிருந்து மொத்தம் 1,100 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை மார்ச் 20 திங்கட்கிழமைக்குள் பணம் கிடைக்காவிட்டால், தாம் நீதிமன்றத்திற்கு சென்று தமக்கான நிதியை திறைசேரி ஒதுக்கீடு செய்யாதது குறித்து முறையிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து திறைசேரியுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் ஏதும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் அச்சிடும் பணிக்காக 533 மில்லியன் ரூபாய் கோரப்பட்ட போதிலும், 339 மில்லியன் ரூபாய் இன்னும் நிலுவையில் உள்ளதாகவும், அதனால் அச்சடிக்கும் பணியை முன்னெடுக்க முடியவில்லை என்று அரச அச்சக பணிப்பாளர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பான 2,500 அச்சுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையில், இதுவரை 54 பணிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.