ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கிழித்து குப்பைத் தொட்டியில் போட வேண்டும் என நீதி அமைச்சர் நிமால் சிறிபால சில்வா தெரிவித்த கருத்தினை ஐ.நா இல் தெரிவிக்குமாறு தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் சவால் விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலானளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற ஐநா மனித உரிமை பேரவையில் 30/1 தீர்மானத்தை நிறைவேற்ற அரசாங்கம் இணக்கம் தெரிவித்தது.
எனினும் இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்ட அடுத்த ஆண்டில் இருந்து அப்போதைய ஜனாதிபதி, பிரதமர், சிரேஷ்ட அமைச்சர்கள் இதனை நிறைவேற்றாமாட்டோம் என கூறி வந்தனர்.
எனினும் இங்குள்ள எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு பிரேரணையை நிறைவேற்ற கால அவகாசம் வழங்க இணக்கம் தெரிவித்தனர்.
இலங்கை அரசு நிரைவேற்ற மாட்டோம் என கூறிய விடயத்தை அவர்கள் நிறைவேற்றுவார்கள் என மக்களுக்கு கூறி கால அவகாசம் வழங்கி அதனை நீர்த்துப் போகும் அளவுக்கு கொண்டுவந்து விட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் தற்போதைய அரசின் நீதி அமைச்சர் ஐ.நா தீர்மானத்தை கிழித்து குப்பைத் தொட்டியில் போட வேண்டும் என அண்மையில் கூறியுள்ளார்.
உங்கள் அரசுக்கு முதுகெலும்பு இருந்தால் இந்த கூற்றை நடைபெறவுள்ள ஐ.நா கூட்டத் தொடரில் கூறுங்கள். உங்களுக்கு திறன் இருந்தால் ஐ.நா உறுப்பு நாடுகளில் இருந்து விலகுங்கள் பார்க்கலாம்.
இவ்வாறான கதைகளை கூறி நாட்டில் பிரச்சனைகளை அதிகரிக்கும் செயற்பாடுகளையே செய்து வருகின்றனர்.
அண்மைய ஜனாதிபதியின் உரையில் கூட இந்த நாட்டில் தேசிய இனப் பிரச்சனை என்று ஒன்று இல்லை என்பதைப் போலவே உரையாற்றினார்.
தமிழினம் இந்த நாட்டில் அதிகார பகிர்வு ஊடாக இனப் பிரச்சனைக்கு தீர்வை கோரி வருகின்றது. அண்மையில் இந்திய பிரதமர் கூட 13 ஆவது திருத்த சட்ட மூலத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் எனக் கூறியிருந்தார்.
அதனை கூட செய்ய மாட்டேன் என ஜனாதிபதி கூறியுள்ளார். அப்படியானால் தமிழ் மக்களுக்கான இடைக்கால தீர்வை கூட தர அவர் தயராக இல்லை.
எனவே இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். தமிழ் மக்களின் இனப் பிரச்சனைக்கு தீர்வை வழங்க ஐ.நா தலையிட வலியுறுத்தி வடக்கு கிழக்கில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” என தெரிவித்தார்.