13வது திருத்தம் தொடர்பில் இந்தியாவை வலியுறுத்து – சிவஞானம்

cvk
cvk

13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தமாட்டோம் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச கூறிய கருத்து தொடா்பாக இந்தியா தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என நாங்கள் திடமாக நம்புகிறோம் என சீ.வி.கே.சிவஞானம்தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளா் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியப் பிரதமரை டில்லியில் சந்தித்தபோது 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரியதாகச் செய்திகள் வெளியாகியிருந்தது.

அதேவேளை இந்தியாவின் பிரபல நாளிதழில் 13வது திருத்தச் சட்டத்தை வழங்கமுடியாது என தெரிவித்ததாக செய்திகளும் வெளியாகியிருந்தது.

13வது திருத்தச் சட்டம் என்பது அரசியல் அமைப்பிலுள்ள ஒரு அம்சம் என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுதான் அவர் இந்தக் கருத்தைக் கூறியிருக்கின்றார். நான் இதைப்பற்றி பெரியளவில் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை. இத்தகைய கூற்றுக்கள் கடந்த காலங்களிலும் பேசப்பட்டுதான் இருக்கின்றது.

நாங்கள் பின்நோக்கிக் செல்கின்றோமா என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது. இந்தக் கருத்தைப் பற்றி அதிகம் அலட்டத் தேவையில்லை. குறிப்பாக 55ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சிங்களம் மட்டும் தான் என்ற சட்டம் பல்வேறு போராட்டங்கள் கோரிக்கைகளுக்குப் பின்னர் சிங்களமும் தமிழும் இந்த நாட்டின் மொழிகள் என அங்கீகரிக்கப்பட்டது.

ஜனாதிபதி கூறுவதை தற்போதுள்ள நாடாளுமன்றம் நிறைவேற்றலாம் ஆனால் கோட்டாபயவின் குறித்த கருத்துக்கள் தொடர்பில் நாங்கள் அச்சமடையவோ ஏமாற்றம் அடையவோ தேவையில்லை. நாங்கள் தந்தை செல்வாவின் வழியில் இன்றுவரை எமது இலட்சியத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கின்றோம்.

ஐ.நா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைக் குப்பையில் தூக்கிப் போடவேண்டும் என இப்போதுள்ளவர்கள் கூறுகின்றார்கள். அவர்கள் அவ்வாறுதான் கூறுவார்கள் ஆனால் உலகத்தில் தரம் வாய்ந்த நிறுவனத்தைப் பற்றிக் கதைப்பதில் கவனம் வேண்டும் அதனைக் குப்பைத்தொட்டியில் போடுவதற்கு இவர்கள் உருவாக்கினார்களா? நாங்கள் இத்தகைய கதைகளைப் பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.

13வது திருத்தச்சட்டம் தான் எங்களுடைய அரசியல் தீர்வாக எந்தக் காலத்திலும் நாங்கள் கூறியதில்லை. இது எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும் 13வது திருத்தச் சட்டம் இல்லை என்றால் கூட பறவாயில்லை. ஒரு சில விடயங்களை வெளிப்படையாகப் பேசமுடியாத சூழலும் உள்ளது.

இந்தியா எத்தகைய நிலைப்பாட்டில் இருக்கின்றது? பிரதிபலிப்பைக் காட்டும் என்பதை நாங்கள் ஊகிக்க முடியாது. ஆனாலும் இந்தியா குறித்த கருத்து தொடர்பில் பிரதிபலிக்க வேண்டிய தேவையுள்ளது. அது நிச்சயமாக நடக்கும் என்பதை எதிர்பார்க்கின்றோம்

நாங்கள் அது தொடர்பில் பேசி முரண்பாட்டு நிலையை ஏற்படுத்த விரும்பவில்லை. இந்தியா தன்னுடைய இராஜதந்திர வழியில் தன்னுடைய நிலைப்பாட்டை எடுக்கும் என்று எங்களுக்கு நம்பிக்கையுள்ளது.

மேலும் ஊடகவியலாளர்களால் நாட்டில் ஏற்பட்டுள்ள கைதுகள் இனவாதக் கருத்துக்கள் தொடர்பில் பதிலளிக்கையில்,

ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் வழமையாக நடக்கின்ற செயற்பாடு இதுதான். ஒரு சில கட்டமைப்புக்களைப் புரிந்துகொள்ளாதவர்கள் பலவித கருத்துக்களைக் கூறுவார்கள் .

பிரதமராக இருக்கின்ற மஹிந்த ராஜபச்ஷ மௌனமாகவே இருக்கின்றார் ஒரு சில கருத்துக்களைக் கூறுகிறார். அதேபோல் தான் ஜனாதிபதி கோட்டாயவும் ஒரு சில கருத்துக்களைக் கூறுகின்றார்.

இடையில் இருக்கின்ற சில்லறைகள் தான் பலவித கருத்துக்களைக் கூறுகின்றார்கள். எனவே நாங்கள் பல விடயங்களையும் அவதானிக்கின்ற நிலையில், தான் இருக்க வேண்டும். அவசரப்பட்டு எதிர்க்கருத்துக்களைக்கூறி அதுவே தெற்கிலுள்ள இனவாதிகளுக்கு மதவாதிகளுக்கு தீனிபோட்டு இரையாகக்கூடாது.

ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட நிலைமைகள் அனைவருக்கும் புரியும். எனவே அரச தரப்பிலுள்ளவர்களுடன் அரசியல் புரிந்துணர்வு வருகின்றவரை அமைதியாக இருப்பதே சிறந்தது” என தெரிவித்தார்.