மன்னாரில் 5G அலைக்கற்றை கோபுரம் – மக்கள் கடும் எதிர்ப்பு

5ஜி
5ஜி

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பள்ளிமுனை கிராமத்து மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் 5G அலைக்கற்றை கோபுரம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை இரவோடிரவாக ஆரம்பித்துள்ள நிலையில் மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து குறித்த பணிகள் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இது தொடர்பான மகஜர் ஒன்றை மாவட்ட அரசாங்க அதிபரிடம் இன்று மக்கள் கையளித்துள்ளனர்.

5G அலைக்கற்றை கோபுர அமைப்பினால் எமது பகுதியில் வாழும் சிறுவர்கள், முதியவர்கள் நோய்வாய்ப்படுவதுடன் சரும நோய்கள் மற்றும் புற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. குறித்த கோபுரத்தில் கமெரா பொருத்துவதினால் எங்களுடைய தனிப்பட்ட அன்றாட வாழ்க்கை செயற்பாடுகள் பாதிப்படையவும் வாய்ப்புக்கள் உள்ளன.

குறித்த தொலைத் தொடர்பு கோபுரத்தை அமைப்பதற்கான அனுமதி சுற்றுச் சூழல் அதிகார சபையிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்படாத நிலையில் பிரதேசத்தில் வாழும் மக்களின் சம்மதமும் பெறப்படவில்லை.

எனவே குறித்த 5G அலைக்கற்றை கோபுரத்தை எமது பகுதியில் அமைப்பதற்கு பள்ளிமுனை கிராம மக்களாகிய நாங்கள் முற்றாக எதிர்க்கின்றோம். ஆகையால் இதற்கான தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.