பெண் பொலிஸ் அதிகாரியின் வீட்டில் மறைந்திருந்த கொள்ளையர்கள் இருவர் கைது!

Arrested Handcuff
Arrested Handcuff

தெல்லிப்பளை பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டுக்குள் மறைந்திருந்த கொள்ளைச் சந்தேகநபர்கள் இருவர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

மானிப்பாய், கோப்பாய் மற்றும் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளையிட்ட நகைகளை வவுனியாவில் விற்பனை செய்துள்ளமையை அறிந்து மானிப்பாய் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் சந்தேகநபர்கள் இருவரும் தெல்லிப்பளையில் உள்ள தமிழ்ப் பெண் உத்தியோகத்தரின் வீட்டில் மறைந்திருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் குறித்த வீடு இன்று நண்பகல் (16) முற்றுகையிடப்பட்டு சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

வீட்டில் மறைத்துவைத்திருந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் கடந்த இரு மாதங்களுக்கு மேலாக கடமைக்குச் சமுகமளிக்கவில்லை. அவர் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.