பொங்கு தமிழ் பிரகடனத்தை அங்கீகரிக்க வலியுறுத்தி இவ்வாண்டு இறுதிக்குள் மாபெரும் மக்கள் எழுச்சி நிகழ்வை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
பொங்குதமிழ் பிரகடன 19ம் ஆண்டு நிகழ்வு யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொங்கு தமிழ் நினைவு தூபியில் இன்று (17) நடைபெற்றது.
இலங்கை அரசின் கொடுமைகளுக்கு எதிராகவும், தமிழ்தேசத்தின் திட்டமிட்ட அழிப்பிற்கு எதிராகவும், அவற்றைத் தகர்த்தெறிந்து எழுச்சி கொண்டு தமிழ் மக்கள் தமது உரிமைக் குரலை உயர்த்தி வெளிப்படுத்திய எழுச்சிமிக்க பிரகடனமே ”பொங்கு தமிழ்”
இந்நிகழ்வு நடைபெற்று இன்றுடன் 19 ஆண்டுகள் நிறைவடைகின்றது. எனினும் எம்மினம் இன்னமும் சிங்கள பௌத்த பேரினவாத அடக்குமுறைக்குள் சிக்குண்டு எமது தேசத்தின் தாங்குதூண்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இவ் அழிப்பு தொடர்வதனை நாம் அனுமதிக்க முடியாது.
இன்றைய தினத்தில் “எமது பல்கலைக்கழகம் கடந்த காலத்தில் மேற்கொண்ட வரலாற்றுக் கடைமைகளை ஜனநாயக வழியில் தொடர்ந்தும் முன்னெடுப்போம்” என யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தமது உறுதியெடுப்பினை மேற்கொண்டிருந்தனர்.
இதனைத் தவிர அரசினால் கடந்த ஆட்சியில் தாயாரிக்கப்பட்டு பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய ஒற்றையாட்சிக்கான இடைக்கால அறிக்கையை நிராகரித்து எமது தேசத்தின் இருப்பை பாதுகாப்பு குறித்து பின்வரும் தீர்மானங்களை வலியுறுத்தியிருந்தனர்.
வடக்கு கிழக்கு இணைந்த தமிழரின் தாயகம் அங்கீகரிக்கப்படல் வேண்டும்.
தமிழரின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படல் வேண்டும்.
தமிழ்த் தேசமும் அதன் தனித்துவமான இறைமையும் அங்கீகரிக்கப்படல் வேண்டும்.