பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தேர்தலை பிற்போடும் சதித்திட்டமே மேற்கொள்ளப்படுகின்றது என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சோசலிச மக்கள் முன்னணி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆரம்பத் தில் இருந்தே ஜனாதிபதி தேர்தலை பிற்படுத்தும் நோக்கில் ஒருசில தரகர்களுடன் இணைந்துகொண்டு சதித்திட்டங்களை மேற்கொண்டு வந்திருந்தார்.
தற்போது ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்குவது தொடர்பில் அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றார். நீதிமன்றத்துடன் இந்த நடவடிக்கையை சிக்கலாக்கி இதன் மூலம் தேர்தலை பிற்படுத்துவதே அவரின் திட்டமாகும்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு செயற்படுவதற்கு பிரதான காரணமாக இருப்பது, சஜித் பிரேமதாசவுடன் அவருக்கு இருக்கும் பிரச்சினையாகும். அத்துடன் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தோல்வியடைவது நிச்சயமாகும். அதனை தடுப்பதற்கான இறுதி முயற்சியாகவே இதனை மேற்கொள்ளப்போகின்றார். அதிகாரத்தை மாற்றும் தேர்தலாகவே ஜனாதிபதி தேர்தல் இடம்பெறப்போகின்றது. அதனால் மக்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். அவரின் இந்த நடவடிக்கைக்கு அரசாங்கத்தில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஆதரவளிப்பதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்..