இன்றைய அரசியல் சூழ்நிலையில் மாற்று அணிதான் தமிழ் மக்களுக்கான கதி என, தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.
யாழ் சாவகச்சேரியிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மாற்று அணி என்பது தமிழ் மக்களுக்கான சதி என்று என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கூறிய கருத்தை முற்றாக நிராகரிக்கின்றோம். உண்மையில் இன்றைய அரசியல் சூழ்நிலையில் மாற்று அணிதான் தமிழ் மக்களுக்கானதாக இருக்கின்றது.
சென்ற காலத்தில் மக்களிடம் வாக்குகளைப் பெற்று மக்களின் பிரதிநிதிகளாக தாங்களே இருப்பவர்களாக சொல்லிக் கொண்டு அங்கே நல்லாட்சிக்கு முண்டு கொடுத்து, கடைசியில் எம் மக்களை நட்டாற்றில் விட்டிருக்கின்றார்கள்.
மாற்று அணி சதி என்றும் சொல்வதெல்லாம் மீண்டும் அவர்கள் பதவிக்கு வருவதற்கும் தங்களுடைய சுயநல அரசியலைக் கொண்டு செல்வதற்குமேயாகும்.
சுமந்திரனிற்கு பொய் கூறுவது மிக இலகுவான விடயம். அதாவது கரும்பு சாப்பிடுவது போல பொய்களை இலகுவில் சொல்லுவார். அவ்வாறு அவர் பல பொய்களையும் சொல்லியும் இருக்கின்றார்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.