நானே வேட்பாளர் என அடம்பிடிப்பதை நிறுத்த வேண்டும்- மனோ கணேசன் அதிருப்தி

 கணேசன்

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எழுந்திருக்கும் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாத நிலையில் ஐ.தே.க இன் நிலைப்பாடு தொடர்பில் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தனது முகநூல் பக்கத்தில் தனது அதிருப்தியினைத் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்

கடந்த வருட 52 நாள் அக்டோபர் நெருக்கடியின் போது, நாம் அனைவரும் எமக்கு பல கோடிகள் விலை பேசி வந்த எதிரணியை நிராகரித்து, அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும், பாராளுமன்றரீதியாகவும் போராடி வென்று எம் ஆட்சியை நிலை நாட்டினோம். இவை அனைத்திற்கும் ரணில் விக்கிரமசிங்க, அலரி மாளிகையில் விடாப்பிடியாக தங்கி இருந்தபடி தலைமை வழங்கினார்.

அன்று ஐ.தே.க பாராளுமன்றக் குழுவை அழைத்து, “நான் தலைமை வழங்கி நமது அரசாங்கத்தை மீட்டு தருகிறேன். அதற்கு பதில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் என்னை வேட்பாளராக நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என ரணில் கூறி இருக்க வேண்டும்.அப்படி அவர் அன்று கேட்டிருந்தால் ஐதேக பாராளுமன்ற குழுவினர் அனைவரும் இரு கரங்களையும் (கால்களையும்கூட) தூக்கி இணங்கி இருப்பார்கள்.

ஆனால் பிறகு வருவதை ஊகித்து அறியும் தூரப்பார்வை கொண்ட தலைவராக அதை செய்ய ரணில் அன்று தவறி விட்டார்.

இன்று பெரும் பேச்சு பேசும் வேறு எந்தவொரு ஐதேக அரசியல்வாதியும் அரசாங்கத்தை மீட்பதில் அன்று பெரும் பங்கு வகிக்கவில்லை. ஐ.தே.க எம்பிக்கள், ஐவர் கட்சி மாறி மஹிந்த பக்கம் தாவியதைக்கூட இவர்களால் தடுக்க முடியவில்லை. பங்காளி கட்சி தலைவர்களாகிய நாம்தான் இந்த அரசை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகித்தோம். நாம் ஒரேயொரு அடியை எடுத்து வைத்திருந்தால் மஹிந்தவின் அந்த கள்ள அரசாங்கம் நிலைத்திருக்கும்.

இந்நிலையில் அன்று தன்னை தேடிவந்த வாய்ப்பை நழுவ விட்ட ரணில் இன்று “நானே வேட்பாளர்” என பிடிவாதம் பிடிப்பதை நிறுத்த வேண்டும். அதேபோல் ஐதேகவின் “பெரும் புள்ளிகள்” நாம் இன்று சொல்வதை காது கொடுத்து கேட்கவும் வேண்டும்.

போகிற போக்கில் இவர்கள் தமக்குள் சண்டையிட்டு மிக சுலபமாக ஆட்சியை கோடாபயவிடம் கையளித்து விடுவார்கள் போல் தோன்றுகிறது.

என தெரிவித்துள்ளார்