மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னல்டிற்கும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்னோன் ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பு ஒன்று இன்று (29) யாழ் மாநகர முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன் போது யாழ் மாநகரிற்கும் – கனடாவின் டொரொண்டோ மாநகரத்திற்கும் இடையில் உள்ள யாழ் மாநகரை சிறந்த முறையில் திட்டமிடுவதற்கான உடன்படிக்கை தொடர்பில் கேட்டறிந்தார்.
அது தொடர்பில் முதல்வர் குறிப்பிடுகையில்,
டொரொண்டோ மாநகரத்திற்கும் – யாழ் மாநகரத்திற்கும் இடையில் செய்து கொண்ட உடன்படிக்கையின் படி யாழ் மாநகரை இன்னும் 3 மாதங்களில் ஆரம்பிக்க முடியும். அதற்கான முன் அனுமதி ஏற்பாடுகள் டொரொண்டோ மாநகர சபையினால் முன்னெடுக்கப்படுவதாகவும் கனேடிய தமிழ் காங்கிரஸின் நிறைவேற்று அதிகாரி குறிப்பிட்டதை இங்கு முதல்வர் குறிப்பிட்டார்.
மேலும் குறித்த திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு கௌரவ ஆளுநர் ஊடாக அனுமதி பெற வேண்டிய அமைச்சுக்களின் அனுமதிகளைப் பெற்று குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்த உத்தேசித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கு உயர்ஸ்தானிகர் குறித்த திட்டத்தை காலம் தாழ்த்தாது டொரொண்டோ மாநகரத்துடன் கலந்துரையாடி சிறந்த முறையில் நடைமுறைப்படுத்துமாறும், குறித்த திட்டம் நடைமுறைக்கு வருவதில் தமக்கு மிகுந்த மகிழ்ச்சி என தமது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
எமது மாநகரத்தினுள் உள்ள தமிழ், முஸ்லிம்முக்கள் பிரிவினை இன்றி தமிழ் பேசும் மக்களாக அனைவரும் இணைந்து வாழ்ந்து வருகின்றனர். எமக்கு கிடைக்கப் பெறுகின்ற நிதி மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் மக்களுக்கு உரிய முறையில் பகிர்ந்து கொடுக்கப்படுகின்றது. மாநகரத்தின் முதல்வராக எந்தப் பிரிவினையும் காண்பித்தது கிடையாது.
எமது பிரதான பிரச்சினையாக மக்கள் திண்மக்கழிவுகளை தரம்பிரித்து மாநகர கழிவு காவும் வண்டிகளில் வழங்காது, தரம் பிரிக்காமல் பொது இடங்கள், வீதிகளில் வீசுவதனால் நாம் பல சிரமங்களை எதிர்கொள்வதாகவும், எனவே அதனை மாநகர ஊழியர்களால் அப்புறப்படுத்துவதில் சிக்கல்கள் காணப்படுகின்றது. ஊழியர்களைக் கொண்டு தரம்பிரித்துதான் அப்புறப்படுத்தப்படுகின்றது.
ஏற்கனவே தரம்பிரிக்காது திண்மக் கழிவுகளை சேகரித்து வைத்திருந்தமையினால் ஏற்பட்ட மோசமான விளைவுகள், நீதிமன்ற தீர்ப்புக்கள் மற்றும் கட்டுப்பாடுகள் மேலும் எம்மை நெருக்குதல்களுக்கு உள்ளாக்கியுள்ளது எனவும், தற்பொழுது இது தொடர்பில் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது எனவும், பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.