வட மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை தமிழ்தேசிய கூட்டமைப்பு உள்வாங்கி நாடாளுமன்ற தேர்தலில் ஓர் வேட்பாளராக களமிறக்க வேண்டுமென வடக்கு மற்றும் புலம்பெயர் தமிழர்கள் பலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என முன்னாள் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் பிரத்தியேக செயலாளர் வதீசன் ஊடகங்களிற்கு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்.
கடந்த வாரம் யாழ் மண்ணிற்கு விஜயம் செய்த முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பல்வேறு துறையைச் சார்ந்தவர்கள் சந்தித்து கலந்துரையாடினர்.
குறிப்பாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், சமூக அமைப்புக்கள் மற்றும் இளைஞர் அமைப்புக்களை சேர்ந்தவர்கள் சந்தித்து கலந்துரையாடியதுடன் இந்த மண்ணுக்கான சேவைகளை ஓர் ஆளுநராக பிரதிபலன் பராது வழங்கியது போன்று தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த ஓர் வேட்பாளராக வரவேண்டும் என்று புலம்பெயர் தமிழர்கள் உள்ளிட்ட வடக்கு மக்கள் சார்பாக அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
ஆளுநராக இருந்த காலப்பகுதியில் மக்களுக்கு நலன்தரும் பல்வேறு செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் அவற்றின் தொடர்ச்சியான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும் என்றும் அது தொடர்பிலான ஆற்றலுள்ளவர்களே நம் மண்ணுக்கு வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினர்.