பகிடிவதை – நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்: இராதாகிருஷ்ணன்

1 we 1
1 we 1

பல்கலைகழக மாணவர்களுக்குள் முன்னெடுக்கப்படும் பகிடிவதை தொடர்பாக அரசாங்கம் கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

தலவாக்கலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கருத்தை வெளியிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், “பல்கலைகழக மாணவர்கள் என்பவர்கள் இந்த சமூகத்தின் அடுத்த தலைமுறைக்கு எங்களுடைய மக்களை கொண்டுசெல்ல வேண்டியவர்கள்.

எனவே பல்கலைகழகத்தில் பகடிவதை புரிவது, தேவையற்ற செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்க விடயமாகும்.

இது தொடர்பாக அரசாங்கம் எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருக்கின்றோம்.

மலையகத்தைப் பொறுத்தளவில் மலையகத்திலிருந்து தெரிவுசெய்யப்படும் மாணவர்களின் தொகையானது மிகவும் குறைவாக இருக்கின்றது. அப்படியும் எங்களுடைய மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

எனவே, அவர்கள் தங்களுடைய பல்கலைகழக வாழ்க்கையை சரியான முறையில் நிறைவுசெய்து வெளியேறுகின்ற போதுதான் இந்த சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு எட்டப்படும்.

குறிப்பாக வைத்தியத்துறை, பொறியியற்துறை, பட்டயக் கணக்காளர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், சமூக சிந்தனையானளர்கள் போன்றவர்களின் வருகை மலையகத்திற்கு மிகவும் இன்றியமையாதது.

அண்மையில் லிந்துலை பகுதியில் ஒரு மாணவன் தற்கொலை செய்ததாக சந்தேகிக்கப்படுகின்றது. யாழ்.பல்கலைகழகத்தில் மாணவ, மாணவிகள் உயிரிழந்துள்ளார்கள்.

இவர்கள் அனைவரும் தமிழ் மொழி பேசும் சமூகத்தைச் சார்ந்தவர்கள். இவர்களில் யார் பாதிக்கப்பட்டாலும் மலையகம், வடக்கு கிழக்கு, சப்ரகமுவ, ஊவா, போன்றவர்களைக் குறிப்பிடலாம்.

மலையகத்தைப் பொறுத்தளவில் பெற்றோர்கள், பிள்ளைகளை பல்லாயிரம் கனவுகளுடன் பல்கலைகழகங்களுக்கு அனுப்பி வைக்கின்றார்கள். அவர்கள் சில நேரங்களில் தங்களுடைய உணவு சுகபோகங்கள் அனைத்தையும் விட்டுக்கொடுத்தே அதனை செய்கின்றார்கள்.

எனவே, எங்களுடைய மாணவர்கள் பல்கலைகழகம் செல்கின்ற போது அவர்கள் முழுமையாக நிறைவு செய்து வந்தால் மாத்திரமே நாங்கள் உரிய பயனைப் பெற்றுக்கொள்ள முடியும். இது தொடர்பாக இலங்கை அரசாங்கம் முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என இதன்போது அவர் வலியுறுத்தினார்.