தட்டிக் கேட்டதால் போராட்டம் – தேவாமிர்ததேவி

a28
a28

பாலியல் குற்றச்செயல்களை வைத்திய அத்தியட்சகர் மூடி மறைப்பதாகவும் இதனைத் தட்டிக் கேட்கும் தன் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து போராட்டம் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டிற்குள்ளான விசேட தர தாதிய உத்தியோகத்தர் செல்வி ஆர்.தேவாமிர்ததேவி தெரிவித்துள்ளார்.

கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்திய சாலையில் கடமை புரியும் யாழ்ப்பாணம் புங்குடுதீவை சேர்ந்த சிரேஸ்ட தாதி உத்தியோகத்தருக்கு எதிராக சில தாதிய உத்தியோகத்தர்கள் நேற்று மதியம் வைத்தியசாலை முன்றலில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இது குறித்து தேவாமிர்ததேவி கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

எனக்கு எதிராக இந்த பகிஷ்கரிப்பு மேற்கொண்டிருப்பது வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப். ரகுமான் தலைமையில் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த வைத்தியசாலையில் பல முறைகேடுகள் இடம்பெற்று வருகின்றன. இங்கு 4 வருடங்களாக பணியாற்றி வரும் எனக்கு இந்த பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட அனைவரும் கள்ளர்கள் (தாதியர்கள்) என்பது தெரியும்.

இவர்கள் தங்களது பணியை வைத்தியசாலையில் மேற்கொள்ளாது வெளியிடங்களில் செய்து கொண்டு இருப்பவர்கள் என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன். அத்துடன் இங்கு (வைத்தியசாலையில்) பல பாலியல் குற்றச்செயல்கள் இடம்பெறுவதாகவும் இதனை வைத்திய அத்தியட்சகர் மூடி மறைப்பதாகவும் இதனைத் தட்டிக் கேட்கும் தன்மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை நிர்வாகத்தின் உதவியுடன் சிலர் முன்வைத்துள்ளனர் – என கூறினார்.

தொடர்ந்து குற்றச்சாட்டிற்குள்ளான விசேடதர தாதிய உத்தியோகத்தர் செல்வி ஆர்.தேவாமிர்ததேவி கருத்திற்கு பதிலளித்த வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப். ரகுமான்,

குறித்த குற்றச்சாட்டிற்கு உள்ளான தாதியர் மேற்பார்வையாளர் அனைத்து தாதியர் மீதும் குற்றம் சுமத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவரது கட்டுப்பாடுகளின் கீழ் இயங்காத தாதியர் மீது பொய் குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றார். வைத்தியசாலை வளங்களை தவறாகவும் முறைகேடாகவும் பயன்படுத்தி வந்ததை அவதானித்து அதற்கான நடவடிக்கைகள் எம்மால் எடுக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் இவர் பணிகளை மேற்கொள்ளும் ஏனைய தாதியர்களை படம் பிடிப்பதுடன் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு தெரியாமல் நன்கொடைகளை பெறுவது போன்ற குற்றச் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்.

அத்துடன் எமது வைத்தியசாலையில் வைத்திய சட்ட திட்டங்களை மறைத்து மேலதிக கொடுப்பனவு பணியை மேற்கொண்டதை நிர்வாகம் கண்டித்து அவரால் சட்டவிரோதமாக பெற்றுக் கொள்ளப்பட்ட மேலதிக கொடுப்பனவை மீள பெற நடவடிக்கை மேற்கொண்டதன் காரணமாகவே மேற்கண்டவாறு தாதியர் மேற்பார்வையாளர் மோசமாக நடந்து கொள்வதாக தனது விளக்கத்தை அளித்துள்ளார்.