அடிக்கடி மாற்றப்படும் கல்விக் கொள்கைகளால் பயன் இல்லை- ஸ்ரீதரன்

iy
iy

இலங்கையின் கல்விக் கொள்கைகள் அவ்வப்போது அரசியல் இருப்புக்காக மாற்றப்படும் நிலையில் அவற்றினால் எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தரமான கல்விக் கொள்கையை உருவாக்காமல் முன்னேற்றத்தைக் காணமுடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிளிநொச்சி, உருத்திரபுரத்தில் உள்ள சக்திபுரம் பகுதியில் கிராமிய அபிவிருத்திம் திட்டத்தின்கீழ் இரண்டு மில்லியன் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட ஜமுனன் முன்பள்ளிக்கான புதிய கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

குறிதத் நிகழ்வு கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் சிறிதேவன் தலைமையில் இடம்பெற்றதுடன் முதன்மை விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் கலந்துகொண்டு முன்பள்ளி கட்டடத்தினைத் திறந்துவைத்தார்.

இந்த நிகழ்வில் உரையற்றிய ஸ்ரீதரன், “இலங்கையின் கல்விக் கொள்கைகள் அரசியல் இருப்புக்காகவே மாறிமாறி வருகின்ற அரசாங்கங்களினால் அமைக்கப்படுகின்றன.

முன்பள்ளிகள், பாடசாலைகள் கல்வி திணைக்களத்தின் கீழ் கல்வி கொள்கைகளுக்காக இயங்க வேண்டும். விடுதலைப் புலிகள் அமைப்பு அக்காலப்பகுதியில் தனியான கட்டமைப்புக்களை உருவாக்கி முன்பள்ளிகளைத் தரமாக வழிநடத்தினார்கள். ஒரு விடுதலை அமைப்பினால் இதனைக் கொண்டுசெல்ல முடியும் எனில் ஏன் ஓர் அரசாங்கத்தினால் கொண்டுசெல்ல முடியாதுள்ளது?

ஒவ்வொரு அரசாங்கங்களும் ஆட்சிக்கு வரும்போதும் புதிய கல்விக்கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன. ஆனால் கல்வியில் முன்னேற்றம் எட்டப்படுவதில்லை. இலங்கையின் கல்விக்கொள்கைகள் அவ்வப்போது அரசியல் இருப்புக்காக உருவாக்கப்படுகின்றன. அத்துடன் கல்விக்கொள்கை மாறாத வரையும் கல்வியில் எந்த முன்னேற்றத்தையும் அடைய முடியாது.

நாட்டின் வழிகாட்டிகளாக பல்கலைக்கழகங்கள் இருக்கும் அதேவேளை, அவை உயர்ந்த பார்வையில் பார்க்கப்படுகின்ற யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மற்றும் கிளிநொச்சி வளாக மாணவர்கள் கூட தமது பல்கலைக்கழகத்தின் பெயரைக்கூற வெட்கப்படுகின்றார்கள். அரசியல் என்பதற்கு அப்பால் எமது சமூகம் தவறான பாதையில் செல்கின்றது.

தற்போது எமது சமூகம் சீரழிக்கப்பட்டு வருகிறது. கிளிநொச்சியில் ஒரு தனியார் கல்வி நிலையத்தை நடத்தி வரும் ஆசிரியர் தனது கல்வி நிலையத்தை மூடப்போவதாக அண்மையல் குறிப்பிட்டார்.

அதாவது, போதைப்பொருள் பாவனையால் சின்னாபின்னமாகிப்போயுள்ள இளைஞர்களால் பல்வேறு சந்தர்ப்பங்களில் கல்விக்காக செல்கின்ற மாணவிகள் மீது துன்புறுத்தல்கள், பாலியல் சேட்டைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த ஆசிரியர் என்னிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் பெற்றோர்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும் எமது பிள்ளைகளின் வளர்ப்பு முறைகள் தொடர்பாக திரும்பிப்பார்க்க வேண்டும். இந்த சமுதாயம் ஏன் இவ்வாறானதொரு நிலைக்குச் சென்றுள்ளது என்பது குறித்து நாம் ஆராய வேண்டும்.

ஒரு காலத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை உயர்ந்த பார்வையில் பார்த்த நிலையில் இன்று இவ்வாறு பின்னுாக்கி சென்றமைக்கான காரணம் என்ன?

எமது வளர்ப்பு முறையில் குறைபாடுகள் உள்ளதா என்பதை பெற்றோர்களாகிய நாங்கள் நிச்சயமாக திரும்பிப் பார்க்க வேண்டும். இனிவரும் காலங்களில் பெற்றோர்களாகிய நாங்கள் எமது பிள்ளைகளை ஒழுக்கத்துடன் வளர்க்காது போனால் மிக மோசமான சமூகமாக எமது இனம் மாறும் நிலையே ஏற்படும்” என்று குறிப்பிட்டார்.