போராட்டத்திற்கு செல்லவிடாது மக்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைத்த பாராளுமன்ற உறுப்பினர்!

Untitled collage
Untitled collage

போராட்டத்தில் நின்ற மக்களை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேர்தல் பரப்புரை கூட்டம் ஒன்றிற்கு அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த நிலங்களை விடுவிக்க கோரி கேப்பாபுலவு பிரதான இராணுவ முகாமிற்கு முன்பாக இன்று மாபெரும் போராட்டம் ஒன்றிற்கு தயாராகி வந்துள்ளனர்.

இந்நிலையில் கேப்பாபுலவு மக்களின் ஜனநாயக வழி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் மூன்று வருடம் பூர்த்தியாகிய நிலையில், மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றிற்கு தயாராகியுள்ளனர்.

குறித்த போராட்டத்தில் பங்குபற்றவிருந்த ஒரு பகுதி மக்களை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் தேர்தல் பரப்புரை கூட்டம் ஒன்றிற்கு அழைத்து சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகனை தொடர்பு கொண்டு வினவிய போது,

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இளைஞர் மாநாட்டு கூட்டத்தில் கேப்பாபுலவை சேர்ந்த எவரும் பங்குபற்றவில்லை.

இளைஞர் மாநாடு கூட்டம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தமைக்கு அமைவாக கேப்பாபுலவு மக்களின் ஜனநாயக வழி போராட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. எனினும் முயற்சிக்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

கேப்பாபுலவு மக்கள் 2017.03.01 தொடக்கம் கேப்பாபுலவில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்துள்ள நிலையில், இன்றுடன் மூன்று வருடங்கள் பூர்த்தியாகியும் 104 குடும்பங்களின் சொந்தக்காணிகள் மற்றும் பாடசாலை,சனசமூக நிலையம், முன்பள்ளி, ப.நோ.கூ.சங்கம், பொது விளையாட்டு மைதானம், இந்து, கிறிஸ்தவ மயானங்கள்,கிறிஸ்தவ தேவாலயம் என்பனவற்றை இராணுவத்தினர் விடுவிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.