மட்டக்களப்பு – தன்னாமுனை மியானி நகரில் சுமார் இரண்டு கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட கரப்பந்து மைதானம் மற்றும் கூடைப் பந்தாட்டத்திற்கான சகல வசதிகளையும் கொண்ட உள்ளக விளையாட்டரங்கு என்பன இன்று (01/03/2020) திறந்து வைக்கப்பட்டது.
தன்னாமுனை சொமஸ்கன் திருச்சபை அருட்தந்தையர்களது பங்கேற்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் யோசப் பொன்னையா ஆண்டகை பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
ந்நிகழ்வில் அருட்தந்தையர்களான ஜி.மகிமைதாஸ், வி.இருதயராஜ் மற்றும் மறைந்த லீலா மாஸ்டரின் புதல்விகளான தேன்மொழி தர்மராஜா, மஞ்சுளா சிங்கராஜா உள்ளிட்ட பலர் பிரசன்னமாயிருந்தனர்.
மறைந்த லீலா மாஸ்டர் நினைவாக அவரது குடும்ப உறவினர்களது உதவியுடன் இவ்விளையாட்டரங்கம் நிருமாணிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் யோசப் பொன்னையா ஆண்டகை பூஜை வழிபாடுகள் செய்து திருப்பலி ஒப்புக் கொடுத்தார். தன்னாமுனை சொமஸ்கன் திருச்சபை அருட் தந்தையர்களும் இதில் இணைந்திருந்தனர்.
இதையடுத்து கேக் வெட்டி வீரர்கள் அறிமுகம் செய்யப்பட்டு விளையாட்டுக்கள் ஆரம்பிக்கப்பட்டன. மியானி கிராம சிறுவர்களது நலன்கருதி இவ்விளையாட்டரங்கு நிருமாணிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலை மாணவர்களது கலை நிகழ்ச்சிகள் இங்கு அரங்கேற்றப்பட்டதுடன், இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இம்மைதானம் நாட்டின் சகல பகுதிகளிலும் வாழும் விளையாட்டு ஆர்வலர்கள் பயன்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.