நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக கைதுசெய்யப்பட்டு, இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரு பிக்குகள் உட்பட 22 பல்கலைக்கழக மாணவர்களுக்குமான விளக்கமறியல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவர்களை இன்று காலை கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கறுவாதோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உயர்கல்வி அமைச்சுக்கு முன்னிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தால் சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், இந்த போராட்டம் கடந்த வியாழக்கிழமையே ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இதன்போது மாணவர்கள் உயர்கல்வி அமைச்சுக்கு முன்னிலையில் உள்ள பிரதான வீதி , பாதக்கடவை மற்றும் அமைச்சுக்குள் செல்வதற்கான பிரதான வழியையும் மறைக்கும் வகையில் முகாம் அமைத்து சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர். இதனால் குறித்த பகுதியில் வாகன நெறிசல்களும் ஏற்பட்டிருந்தது.
இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்திய கறுவாத்தோட்ட பொலிஸார் சம்பந்தப்பட்ட மாணவர்களை கைது செய்துள்ளனர். இவர்களுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவை மீறி நீதிமன்றத்தை அவமதித்தமை , பொது மக்களுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் இந்த செயற்பாடுகளுக்கு உதவி ஒத்தாசைகளை வழங்கிமை என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.