மன்னாரில்அரசியல் கைதிகளின் விடுதலை கோரி கவனயீர்ப்புப் பேரணி !

images 2
images 2

வடமாகாண அரசியல் கைதிகளின் உறவுகள் மற்றும் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வட மாகாணத்தில் உள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பெண்கள் ஒன்றிணைந்து எதிர் வரும் வெள்ளிக்கிழமை (06/03/2020) மன்னாரில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக வடமாகாண அரசியல் கைதிகளின் உறவுகள் மற்றும் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைந்து இன்று செவ்வாய்க்கிழமை ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

-குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,,

எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி தொடக்கம் மதியம் 12 மணி வரை குறித்த கவனயீர்ப்புப் போராட்ம் நடைபெறும். இப்போராட்டமானது மன்னார் நகர சபைக்கு முன்பாக ஆரம்பித்து மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்று கூடலுடன் நிறைவு பெறும்.

இலங்கையில் பெண்கள் பல வழிகளில் பாதிக்கப்படுவதுடன் மிகவும் கடினமான வகையில் சமூகத்தில் தள்ளப்படுகின்றார்கள். குறிப்பாக யுத்தத்தின் பின்னரான சூழலில் பெண்கள் அரசியல் ரீதியாகவும், சமுக ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றார்கள்.

குறிப்பாக அரசியல் கைதிகளாக கைது செய்யப்பட்டு ஆண்டாண்டு காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆண்கள்.

அவர்களது நெடுங்கால தடுத்து வைப்பினால் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் அவர்களது குடும்பத்தவர்கள்.குறிப்பாக குடும்பத்தினை தலைமைதாங்கும் பெண்கள் பல இன்னல்களுக்கும் பிரச்சனைகளுக்கும் முகம் கொடுக்கின்றனர்.

இந் நிலையில் சிறையில் நீண்ட காலம் வாடும் இவர்களது குடும்ப உறுப்பினர்களினது விடுதலைக்காக குரல் கொடுக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம்.

ஆகவே மகளிர் தினத்தை முன்னிட்டு சிறையில் வாடும் அரசியல் கைதிகளினது விடுதலைக்காக குரல் கொடுப்பவர்களும், பெண்கள் உரிமைக்காக குரல் கொடுப்பவர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும், பாதிக்கப்பட்ட குடும்ப அங்கத்தவர்களும் ஒன்றிணைந்து ஒர் கவனயீர்ப்பை செய்து அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு ஒர் அணியாக செயற்பட அனைவரையும் அழைக்கின்றோம்.என குறித்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.