இனமும் கொள்கையும் தோற்கக் கூடாது, எமக்கொரு சந்தர்ப்பத்தை தாருங்கள் – சுகாஷ்

20200304 202533 720x375
20200304 202533 720x375

நான் வெற்றி பெற வேண்டுமென்ற அற்ப ஆசையில் தேர்தலில் போட்டியிடவில்லை. இனமும் கொள்கையும் தோற்கக் கூடாது என்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுகிறேன். ஆகையினால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்குங்கள் என க.சுகாஷ் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் போராட்டம் தவறென்றும் கொள்கைக்கு இனி மக்கள் வாக்களிக்க மாட்டார்களென்றும் உரிமை தேவையில்லைஇ சலுகையே போதுமென்ற அடிமைத்தன மனநிலைக்குள் தமிழினத்தை திட்டமிட்டுக் கொண்டுவரும் நிகழ்ச்சிநிரல் கனகச்சிதமாக அரங்கேற்றப்படுகின்றது. 

இதை முறியடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று கருதுகின்றேன். அதனால் தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களினதும் மாவீரச் செம்மல்களினதும் தியாகத்தை மனதிருத்தி ஜனநாயக அரசியற்களத்தில் பயணிக்கும் ‘தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில்’ வரவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளேன். 

எமது கட்சிக்குக் கிடைக்கும் அங்கீகாரமே தமிழ்த் தேசியக் கொள்கைக்கான அங்கீகாரமாகப் பார்க்கின்றேன். நாற்பதாயிரம் மாவீரச் செம்மல்களின் தியாகத்திற்கும் இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு நீதி கேட்கவும் தமிழ்த் தேசத்தின் எதிர்கால நிலையான அபிவிருத்திக்குமாக ‘தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு’ வாக்களித்து எமக்கொரு சந்தர்ப்பம் தருவீர்கள் என்று திடமாக நம்புகின்றேன்.

சிங்களக் கட்சிகளை நிராகரித்து போலித் தமிழ்த் தேசியம் பேசுவோரைப் புறக்கணித்து மாற்றத்திற்கான பயணத்தில் எம்மோடு இணைய அனைத்து உறவுகளையும் உரிமையோடு அழைக்கின்றேன்.

நான் வெற்றிபெற வேண்டும் என்ற அற்ப ஆசையில் போட்டியிடவில்லை. இனமும் கொள்கையும் தோற்கக் கூடாதென்பதற்காகவே போட்டியிடுகின்றேன்!!! தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வெற்றியே எனது வெற்றி!!! தமிழ் மக்களின் வெற்றி!!! என அவர் மேலும் தெரிவித்துள்ளார்