வடக்கு மாகாண சட்டத்தரணிகளின் சேவைப் புறக்கணிப்பு வரும் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை தொடரும் என்ற நிலைப்பாட்டை ஏற்று ஆதரவளிப்பது என யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கமும் தீர்மானம் எடுத்தது.
யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்தின் சிறப்புக் கூட்டம் தலைவி ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்யுசிங்கம் தலைமையில் நேற்று முற்பகல் யாழ்ப்பாணம் நீதிமன்ற சட்ட நூலகத்தில் இடம்பெற்றது.
இதன்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு நீதிமன்றின் கட்டளையை அவமதித்து செயற்பட்டமை மற்றும் கருத்து வெளியிட்டமை தொடர்பில் ஞானசார தேரர் அவர் சார்ந்த தரப்புகளுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்யப்படும் என சட்ட மா அதிபர் எழுத்துமூல உறுதி வழங்கவேண்டும்.
வரும் வெள்ளிக்கிழமைக்கு அல்லது அதற்கு முன்னர் சட்ட மா அதிபர் எழுத்துமூல உறுதிமொழியை வழங்காவிடின் சேவைப் புறக்கணிப்பை தொடர்வது குறித்து மீள்பரிசீலனை செய்யப்படும் என்றும் வடக்கு மாகாண சட்டத்தரணிகள் முல்லைதீவில் நேற்று ஒன்றுகூடி அறிவித்திருந்தனர்.
அதனை ஆதரிக்கும் வகையிலேயே யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் நேற்று புதன்கிழமை கூடி இந்தத் தீர்மானத்தை எடுத்தனர்.