லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவை இலங்கை இராணுவத்தின் தளபதியாக நியமித்தமைக்காக, ஐக்கிய நாடுகளின் அமைதி நடவடிக்கைத் திணைக்களமானது தற்போது ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையணியில் பணியாற்றும் இலங்கை இராணுவப் பிரிவொன்றையும், குறிப்பிட்ட சில அதிகாரிகளையும் திருப்பியனுப்ப முடிவு செய்துள்ளதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் பிரதிப் பேச்சாளர் நேற்று முன்தினம்(25.09.2019) தெரிவித்திருந்தார்.
குறித்த அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து, இலங்கை அரசு ஐ.நா. வுடன் இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடி வருகின்றது. இந்நிலையில் ஐ.நா இன் 74 வது பொதுச்சபை அமர்வில் இலங்கைத் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் குறித்த விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைதி நடவடிக்கைத் திணைக்களத்தின் கீழ்நிலைச்செயலாளர் நாயகத்துடன் இன்று 2019 செப்டம்பர் 27 வெள்ளிக்கிழமை கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.