பேருவளை – பன்னில பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் ஒருவருடன் பழகிய 150 பேர் தனிமைப்படுத்தப்படவுள்ளனர் என்று சுகாதாரத் துறையினர் அறிவித்துள்ளனர்.
அவர்களைத் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக பேருவளை சுகாதார அத்தியட்சகர் வருண செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
பிரசவத்துக்காக குறித்த தாய் களுத்துறை – நாகொடை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போது, அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.
இன்று அவர் குழந்தையைப் பிரசவித்துள்ளதுடன், தாயும் சிசுவும் கொழும்பு நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சிசுவுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை.
பேருவளையில் இதுவரையில் 13 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர் எனவும், அதற்கமைய, 07 கிராம சேவகர் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டு தேவையான சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் பேருவளை சுகாதார அத்தியட்சகர் மேலும் கூறியுள்ளார்.