வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு கடும் எச்சரிக்கை!

index
index

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும்போது அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களைப் பிரபலப்படுத்தும் வகையிலான செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் காலப்பகுதி என்பதாலும் நாடு ஆபத்தை எதிர்கொண்டுள்ள தருணம் என்பதாலும் தேர்தல்கள் ஆணைக்குழு மீது சுமத்தப்படுகின்ற ஆதாரமற்ற விமர்சனங்களுக்கு பதிலளிக்க வேண்டியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

எனினும், விமர்சிப்பவர்களுக்கு அதே பாணியில் தம்மால் பதிலளிக்க முடியாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மக்களுக்கு நிவாரணம் வழங்கும் செயற்பாடுகளுடன் அரசியல்வாதிகள் தொடர்புபடக் கூடாது என ஒருபோதும் கூறவில்லை. எனினும், இந்த நிவாரணப் பணிகள் ஊடாக அரசியல்வாதிகள், வேட்பாளர்கள் அல்லது அவர்களது கட்சிகள் பிரபலப்படுத்தப்படக் கூடாது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றேன்.

தேர்தல் காலப்பகுதி என்பதால் மாத்திரம் அல்லாது ஒழுக்கமுள்ள நாட்டில் வழமையான காலப் பகுதியில் கூட அத்தகைய செயற்பாடுகளை மேற்கொள்ளக் கூடாது.

தேர்தல்கள் ஆணைக்குழு எவருக்கும் சார்பாக செயற்படவில்லை. மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் அரசமைப்புக்கும் மாத்திரம் ஆணைக்குழு சார்பாகச் செயற்படும்” – என்றார்.