யாழில் குடும்பஸ்தர் அடித்துக்கொலை; நான்கு வாரத்தின் பின்னர் பொலிஸார் விசாரணை!

kondavil
kondavil

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் வாள்வெட்டுக் கும்பலின் தாக்குதலால் இரும்பக உரிமையாளர் ஒருவர் 3 வாரங்களின் பின்னர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்த நிலையில் தடவியல் பொலிஸார் நேற்றைய தினமே சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

செப்ரெம்பர் 6ஆம் திகதி தாக்குதல் இடம்பெற்று இரும்பக உரிமையாளர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் நேற்றைய தினமே யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

கோண்டாவில் உப்புமடச் சந்தியில் அமைந்துள்ள லக்சுமி இரும்பகத்தின் உரிமையாளர் கந்தையா கேதீஸ்வரன் (வயது -47) என்பவர் உயிரிழந்திருந்தார்.

இந்தச் சம்பவம் செம்ரெம்பர் 6ஆம் திகதி மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.

அன்றுமாலை இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று இரும்பகத்துக்குள் புகுந்து அதன் உரிமையாளரை கண்மூடித்தனமாகத் தாக்கியதுடன், இரும்பகத்துக்குள் அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பித்தது.

இரும்பகத்தில் இருந்த கட்டை ஒன்றை எடுத்து உரிமையாளரின் தலையில் கும்பல் தாக்கியிருந்தது. அதனால் தலையில் படுகாயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் 24 நாள்களின் பின்னர் அவர் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இரவு உயிரிழந்தார்.

“சம்பவ தினத்தன்று கோப்பாய் பொலிஸார் இரும்பகத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர். எனினும் உரிமையாளரைத் தாக்கல் கும்பல் பயன்படுத்திய மரக்கட்டையை சான்றுப்பொருளாக எடுத்துச் செல்ல பொலிஸார் மறுப்புத் தெரிவித்திருந்தனர்” என்று உறவினர்கள் குறிப்பிட்டனர்.

இரும்பக உரிமையாளர் உயிரிழந்த நிலையில் அவசர அவசரமாக விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிஸார், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று அறிக்கை தாக்கல் செய்தனர்.

உயிரிழந்தவரின் இறப்பு விசாரணையை போதனா வைத்தியசாலைக்கு சென்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னெடுத்தார்.

உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிவான், வழக்கு விசாரணை ஒத்திவைத்தார்.

சம்பவம் இடம்பெற்று 25 நாள்களின் பின்னர் யாழ்ப்பாணம் தடவியல் பொலிஸார் நேற்று சம்பவ இடத்தில் தாக்குதல் தொடர்பான தடயவியல் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

தாக்குதல் நடந்த பின்னர் சில தினங்கள் இரும்பகம் திறந்து வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.