இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முன்னோடியாகவும் அகிம்சையின் தந்தை என்றும் உலகம் முழுவதும் போற்றப்படும் மகாத்மா காந்தியின் 150வது ஜனன தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது.
மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து ஜனாதிபதி மலரஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித்சிங் சந்து மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன, இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட இலங்கை மற்றும் இந்திய விசேட விருந்தினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். மகாத்மா காந்தியின் 150வது ஜனன தினம் இன்று ஒக்டோபர் 02 ஆம் திகதி நினைவுகூரப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.