பதுளையில் துப்பாக்கி ரவைகள் பெருமளவில் மீட்பு!

T 56 Gun Bullets
T 56 Gun Bullets

பதுளை, ஓயா ஆற்றங்கரையில் ரி-56 ரக துப்பாக்கிக்குரிய ரவைகள் பெருந்தொகையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் அவற்றை கண்டெடுத்துள்ளனர்.

இதன்போது 1,098 ரவைகள் பெட்டி ஒன்றிலிருந்தும், உரப்பை ஒன்றிலிருந்தும் கண்டெடுக்கப்பட்டதாக பதுளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

அவசர பொலிஸ் இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து பதுளை – பரகஸ்தென்ன என்ற இடத்திலுள்ள பதுளை ஓயா ஆற்றங்கரைக்கு விரைந்த பொலிஸார் பெட்டியொன்றையும், உரப்பை பொதியொன்றையும் கண்டெடுத்தனர்.

அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெட்டியில் 747 ரவைகளும், உரப் பை பொதியில் 351 ரவைகளுமாக 1098 ரவைகளை கண்டெடுத்த பொலிஸார் அவற்றை பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேற்படி ரி-56 ரக துப்பாக்கிகளுக்குரிய ரவைகள் மீட்கப்பட்ட நிலையில் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

பாதாள உலகக் குழுவினர் இந்த விடயத்தில் தொடர்புபட்டிருக்கலாம் என அறியும் பொருட்டு தீவிர புலன் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.