படையினருக்கு ஒத்துழைப்பு வழங்குக!!

44
44

மக்களைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படும் கடற்படையினர் உள்ளிட்ட முப்படையினரை அவமதிப்புக் உள்ளாக்க வேண்டாம் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன கோரியுள்ளார்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களைக் காப்பதற்காக சுகாதாரத் தரப்புடன் இணைந்து பாதுகாப்புப் படையினர் பெரும் பங்காற்றி வருகின்றார்கள். கடற்படையினரும் இதில் முக்கிய பங்காற்றி வருகின்றார்கள்.

போதைப்பொருளுக்கு அடிமையான ஜா-எல, சுதுவெல்ல நபர்களைத் தனிமைப்படுத்தும் செயற்பாட்டை கடற்படையினர் முன்னெடுத்த நிலையிலேயே கடற்படையினருக்குக் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.

இது வெலிசறை முகாமுக்குப் பரவியது. தங்களுக்கு நோய் தொற்றியதை அறியாத கடற்படையினர் விடுமுறையில் வீடு சென்றிருந்தார்கள்.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய விடுமுறையில் சென்ற சகல கடற்படையினரையும் திருப்பி முகாம்களுக்கு அழைத்தோம்.

ஆனால், விடுமுறையில் சென்ற கடற்படையினரையும் குடும்பத்தினரையும் ஒதுக்கும் நிலை சில ஊர்களில் நிகழ்ந்துள்ளது கவலைக்கிடமான விடயமாகும்.

மக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் தொற்றுவதைத் தடுக்க செயற்பட்ட நிலையிலே படையினருக்குக் கொரோனா தொற்றியுள்ளது. தமது ஆரோக்கியம் குறித்து சிந்திக்காமல் அவர்கள் முன்வந்து செயற்பட்டார்கள். போரின்போதும் அவர்கள்தான் முன்வந்து செயற்பட்டார்கள். இயற்கை அனர்த்தங்களின்போதும், சுனாமி அனர்த்தத்தின்போதும் மக்களைப் பாதுகாக்க அவர்கள்தான் செயற்பட்டார்கள்.

ஆனால், அவர்கள் இவ்வாறான நிலைக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் மக்கள் அவர்களுக்கு எதிராக நடந்து கொள்கின்றார்கள்.

எனவே, இவ்வாறான விடயங்களில் ஈடுபடாது அவர்கள் செய்த சேவை குறித்து சிந்தித்துச் செயற்படுவதோடு, சுகாதார சேவையாளர்களுடன் முன்னின்று இவ்வாறு பணிபுரியும் படையினருக்கு உதவும் வகையில் ஒத்துழைப்பு வழங்கி, அவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் துன்புறுத்த வேண்டாம் எனப் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

அத்துடன் அனைவரும் இணைந்து இந்தக் கொரோனா நோயை ஒழிக்க செயற்படுமாறும் அழைப்பு விடுக்கின்றேன்” – என்று குறிப்பிட்டுள்ளார்.