நீர்ப்பாசன வரியை மானியம்‌ ஆக்குங்கள் – அங்கஜன் பரிந்துரை

Kili News
Kili News

விவசாயிகளிற்கான நீர்ப்பாசன வரியை மானியம்‌ ஆக்குதல்‌ தொடர்பாக அங்கஜன்‌ இராமநாதன்‌ கிளிநொச்சி அரசாங்க அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அச்சம்‌ மற்றும் ஊரடங்கு நிலமை காரணமாக விவசாயிகள் எதிர்கொள்ளும் இடரினை கருத்திற்கொண்டு கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வரியை மானியம்‌ ஆக்குதல் தொடர்பாகவும் நிலக்கடலை, பயறு, உழுந்து மற்றும்‌ கெளப்பி போன்றனவற்றுக்கு உள்ளீடுகளை வழங்குவது சம்மந்தமாகவும் முன்னாள் கமத்தொழில் பிரதியமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அக் கடிதத்தில்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அச்சம்‌ காரணமாக மக்கள்‌ பொருளாதார ரீதியில்‌ பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்‌. இவ்வாறான நிலையில்‌ குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்தும்‌ வகையிலும்‌, நாட்டின்‌ பொருளாதாரத்தினை பாதுகாப்பதற்கும்‌ எதிர்வரும்‌ நாட்களிற்கான உணவு பாதுகாப்பினையும்‌ கருத்தில்‌ கொண்டு ஆரசாங்கம்‌ பல்வேறு
திட்டங்களையும்‌ சலுகைகளையும்‌ வழங்கி வருகின்றது. இவ்வாறான நிலையில்‌ விவசாய உற்பத்திகளை அதிகரிக்கும்‌ வகையில்‌ ஜனாதிபதியினால்‌ பல்வேறு திட்டங்கள்‌ நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளால்‌ செய்கை மேற்கொள்ளப்படுவதில்‌ ஏற்பட்டுள்ள சவால்கள்‌ தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள்‌ எனக்கு கிடைத்துள்ளது. நீர்ப்பாசன வரியை நீக்கி தமது விவசாய நடவடிக்கைகளிற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தி தருமாறு விவசாயிகளால்‌ கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில்‌ சிறந்த நீர்வளமும்‌, மண்வளமும்‌ விவயசாயத்திற்கு ஏற்ற கால நிலையும்‌ காணப்படுவதனால்‌ அதற்கான நிலக்கடலை, பயறு, உழுந்து மற்றும்‌ கெளப்பி போன்ற உள்ளீடுகளை வழங்குவதன்‌ ஊடாக சிறப்பான முறையில்‌
விவசாயத்தை மேற்கொள்வதன்‌ மூலம்‌ பட்டினிச்சாவிலிருந்து மக்களை மீட்பது மட்டுமன்றி தானிய உற்பத்தியிலிருந்து ஓர்‌ சிறந்த இலக்கினை அடைவதற்கான வாய்ப்பாக அமையும்‌ என்பதனையும்‌
கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்‌.

விவசாயிகளால்‌ விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக கிளிநொச்சி மாவட்டத்தில்‌ உள்ள நீர்ப்பாசன குளங்களிலிருந்து மேற்கொள்ளப்படும்‌ அனைத்து விவசாய செய்கைகளிற்கும்‌ பெறப்படும்‌ நீர்வரியினை மானிய அடிப்படையில்‌ நீக்கி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை
மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்‌.

என்று குறிப்பிட்டுள்ளார்.