நிரந்தர வைத்திய நிபுணர்களை மாற்றக் கோரும் தொழிற்சங்க கடிதத்தால் குழப்பம்

4 ttt
4 ttt

கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் நிரந்தர பொது வைத்திய நிபுணர்களாக கடமையாற்றிவரும் இரு மருத்துவர்களை அங்கிருந்து உடனடியாக மாற்றம் செய்து புதியவர்களை நியமிக்கும் படி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அரச மருத்துவர்களது தொழிற்சங்கத்தின் தாய்ச் சங்கமானது கடித மூலம் கோரியுள்ளது. இதனால் வைத்தியசாலை மட்டத்திற்குள் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இவ்விரு மருத்துவ நிபுணர்களும் தம்முடன் ஒத்துழைப்பதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து இதனால் ‘கொரொனா தடுப்பு நடவடிக்கையில் தடங்கல் ஏற்படுகிறது’ என்ற குற்றச்சாட்டை முன்வைத்தே இக்கோரிக்கை விடப்பட்டுள்ளது.

வடக்கிலும் கிளிநொச்சியிலும் வாரத்திற்கு இரு நாள் மட்டுமே குறித்த சில வைத்திய நிபுணர்கள் கடமையாற்றுவது குறித்து மூச்சும் விடாத தொழிற்சங்கம், தற்போதும் நோயாளர் காவு வண்டிகளில் அனுமதி இன்றி பிற மாவட்டங்களுக்கு சென்று தமது ‘உத்தியோகப்பற்றற்ற’ விடுமுறைகளை கழித்துத் திரும்பும் வைத்தியர்கள் குறித்துக் கண்டும் காணாமல் இருக்கும் தொழிற்சங்கம், கடமையேற்ற காலத்திலிருந்து வைத்தியசாலை வளாகத்தினுள்ளேயே தங்கியிருந்து கடமையாற்றும் இரண்டு வைத்திய நிபுணர்களை தற்போது குறிவைத்துள்ளமை வைத்தியசாலை மட்டத்தில் பேசுபொருளாகி உள்ளது.

இதனால் இனி வரும் காலங்களில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கும் நிரந்தர வைத்திய நிபுணர்கள் கடமையேற்க விரும்பி வராத நிலை தோன்றுவதோடு, வைத்தியசாலையில் உள்ளகப் பயிற்சி வைத்தியர்கள் சேவைக்கு அனுமதிக்கப்படுவதிலும் தடங்கல்கள் வரக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுட்டுள்ளது.

கிளிநொச்சி வைத்தியசாலையின் நிர்வாகத்தில் முதற் தடவையாக தொழிற்சங்க தலையீடு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்தோடு இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைப் பணிப்பாளரை தொடர்பு கொண்டு வினவிய போது

குறித்த விடயம் தொடர்பில் தனக்கும் இடமாற்றம் செய்யக் கோரிய கடிதத்தின் பிரதி கிடைக்பெற்றதாகவும், அது தொடர்பில் மாகாண சுகாதார பணிப்பாளரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் எனவும் தெரிவித்தார். இதே விடயம் தொடர்பில் கிளிநொச்சி பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சரவணபவன் அவர்களின் தொடர்பை ஏற்டுத்த பல முறை முயற்சி செய்த போதும் அவர் பதிலளிக்கவில்லை.