பாசையூர் கடலில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இளைஞன் சடலமாக மீட்பு

4hh
4hh

பாசையூர் கடலில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இளைஞன் மர்மமான முறையில் கடலில் இருந்து இன்று மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் இரண்டாம் குறுக்குத்தெரு பாசையூர் கிழக்கைச்சேர்ந்த சில்வெஸ்ரர் டல்சன் சயித் வயது 26 என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது பாசையூர் கடலுக்கு மீன்பிடிப்பதற்காக ஒரு படகில் மூன்று பேர் சென்றுள்ளனர். கடலில் இறங்கி மீன்வலைகளை வீசிக்கொண்டிருந்தபோது உயிரிழந்த குறித்த இளைஞனைக் காணவில்லை என்று மீன்பிடிப்பதற்கு கூடச்சென்றவர்கள் தேடியுள்ளனர்.

குறித்த இளைஞன் வேறு நபர்களுடன் கரைக்குத் திரும்பியிருக்கலாம் என நினைத்து கூடச்சென்றவர்கள் கரைதிரும்பியுள்ளனர்.

அவ்வாறு கரை திரும்பியவர்கள் இளைஞனைத் தேடியபோதும் கிடைக்கவில்லை. இதனால் உடனடியாக கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது கடற்படையினர் நடத்திய தேடுதலில் குறித்த இளைஞன் கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.