ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை மிகக் கடுமையாக எதிர்க்கின்ற உலமாக் கட்சி மக்களின் நலன்களை கருத்திற்கொண்டு ஒரு ஒப்பந்தத்தை செய்து கடந்த 2015 ஆண்டு இடம் பெற்ற பொதுத் தேர்தலில் முன்னாள் இராஜாங்க அமைச்சராக இருந்த எச்.எம்.எம்.ஹரீஸிக்கு ஆதரவு வழங்கி அவரை வெற்றிபெறச் சொய்தோம். ஆனால் கடந்த தேர்தலில் செய்த அந்தத் தவறை இம்முறை செய்யப்போவதில்லை என்று உலமாக் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீட் தெரிவித்தார்.
கடந்த பொதுத் தேர்தலின்போது, உலமாக் கட்சி ஹரீஸிக்கு வழங்கிய ஆதரவினால் கல்முனைத் தொகுதி மக்களிடத்தில் பாரிய திருப்பம் ஏற்பட்டது. அதன் காரணமாகவே அவர் வெற்றிபெற்றார். அவ்வாறு வெற்றிபெற்ற அவர், எமது முஸ்ஸிம் மக்களையும் கல்முனையை பாதுகாக்கின்ற விடயத்திலும், அபிவிருத்தி செயற்பாட்டிலும் ஒரு காத்திரமான எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காது வெறுமெனே இருந்து வந்த சூழ் நிலையைத்தான் நாங்கள் கண்டுள்ளோம்.
எம்மக்களுக்கும் எமது பிரதேசங்களுக்கும் எந்தப் பிரயோசனமும் இல்லாத ஒருவரை வெற்றிபெறச் செய்ய வைப்பதன் மூலம் எதிர்காலத்தில் பாரிய படுகுழிக்குள் எமது மக்கள் தாமாகவே அகப்பட்டுவிடுவார்கள் என்பதை அம்பாறை மாவட்ட மக்கள் நன்கு சிந்திக்கவேண்டும் என்று உலமாக்கட்சியின் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
எம்மக்களையும் எமது பிரதேசத்தையும் பாதுகாக்கின்ற ஒருவரை சரியாக இணங்கண்டு அவரை இத்தேர்தலில் வெற்றிபெறச் செய்ய வைக்கவேண்டும் என்பதே எமது கட்சியினதும் மக்களினதும் நோக்கமாக இருக்க வேண்டும் என்றார்.